Published on: ஜூன் 19, 2025

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கூட்டம் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு மேற்கொண்டு, குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தீர்வுகளை செயல்படுத்துவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். தேசிய கொள்கைகள் மற்றும் சட்டங்களை இயற்றுதல், அதற்குத் தேவையான மனித, பௌதிக மற்றும் நிதி வசதிளை வழங்கும் நடவடிக்கை இந்தக் குழுவால் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

வனவிலங்குகளை இயற்கையின் ஒரு அங்கமாக கருதி, முடிவுகளை எடுப்பதே சிறந்த வழிமுறை என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, வனவிலங்குகளுக்கான வன உரிமையை அங்கீகரித்து தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள மாவட்டங்களுக்கு விரைவான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை வைத்திய பீடத்தின் போராசிரியர் அசோக்க தங்கல்ல இங்கு கருத்துத் தெரிவிக்கையில், செங்குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வுகளை அறிவியல் அணுகுமுறை மூலம் வழங்க முடியும் என்றும், விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வன ஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எல்.ஆர்.சீ. மாரசிங்க, இந்தப் பிரச்சினைக்கு பன்முக அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வனவிலங்குகள் கணக்கெடுப்பில் இருந்து விலங்குகளின் எண்ணிக்கை குறித்த அடிப்படைத் தகவல்களைப் பெற முடிந்தமை இதன்போது மிக முக்கியம் என்றும், சமூக மனப்பாங்குகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் ரீதியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெறுவது முக்கியம் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட குழுவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.