Published on: ஜூன் 22, 2025

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

  • வட மாகாணத்தில் 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமையை வெளிப்படுத்திய 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்படி வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு, இன்று (22) முற்பகல் இரணைமடு நெலும் பியச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், ஒரு மாவட்டத்தில் இருந்து 60 மாணவர்கள் தெரிவு செய்து, 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் நடைமுறைப்படவுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி நிதியத்தினை முறைமைப்படுத்தி, அதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகளை சீர்செய்து, இன்று அதன் நன்மைகளைப் பெற வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை செயற்திறன் மிக்க வகையில் மாற்றுவதற்கு அதனை டிஜிட்டல் மயப்படுத்தவும், அதன் சேவைகளை பிரதேச ரீதியாகப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிட்டார்.

பிள்ளைகள் வாழ்க்கையை வெல்வதற்கு கல்வியே பிரதான கருவியாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிள்ளைகள் தமக்கு கிடைக்கும் இந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த பிரஜைகளாக வாழ்வில் வெற்றி பெறுவதுடன் அதேபோன்று, நாடும் தேசமும் வெற்றிபெறும் வகையில் பிள்ளைகள் செயற்பட வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள்.

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அபிஷேக் இங்கு நன்றியுரை ஆற்றியதுடன், பொருளாதாரத்தில் சிரமம் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எம். ஜகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.