Published on: ஜூன் 2, 2025

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக“ – என்ற தொனிப்பொருளின் கீழ் “வரி சக்தி – தேசிய வரி வாரம்” ஆரம்பித்தல் இதற்கு இணைந்தவகையில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டைக் பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

வரி செலுத்துவதில் மக்களின் அவநம்பிக்கையான மனப்பான்மையை நம்பிக்கையான மனப்பான்மையாக மாற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற புதிய வரிக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரி சக்தி தேசிய வரி வாரம் செயல்படுத்தப்படுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையான வாரத்தில், வரி செலுத்துதல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வரிப்பணம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதுடன் மக்களுக்கான நன்மைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத் தளத்தின் திறப்பு விழாவும் இங்கு நடைபெற்றதுடன், 2024/25 மதிப்பீட்டு ஆண்டிற்கான முதல் வரி வருமானமாக ஜனாதிபதி, தனது தனிநபர் வருமான வரி அறிக்கையை இணையத் தளத்தில் பதிவேற்றார்.

மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ASYHUB முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மன் அரசு மற்றும் UNCTAD ஆகியவற்றின் ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் மூலம், இறக்குமதியாளர்களுக்கு பொருட்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு வரி செயற்பாடுகளை முடிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதன் மூலமாக, சுங்கத்தால் செயல்படுத்தப்படும் அபாயங்கள் முகாமைத்துவம் மென்பொருள் மூலமாகவும், அபாயங்கள் அற்ற கொள்கலனை கப்பலில் இருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளுக்கு கொண்டு செல்ல வசதிகளை ஏற்படுத்தும்.
சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான போத்தல்களை பாதுகாப்பு அடையாள முறையின் ஊடாக அடையாளம் காணும் தொலைபேசி செயலியை மதுவரி அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இங்கு உரையாற்றியதுடன், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வரி செலுத்தும் இணக்கத்தை மேம்படுத்தி வரி அடிப்படையை வலுப்படுத்துவதே வரி வாரத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கும்போது, வரி செலுத்துவது நாட்டிற்கு நல்லெண்ணத்தில் செய்யப்படும் முதலீடாகும் என்று தெரிவித்தார்.

“Clean Sri Lanka” நிகழ்ச்சித் திட்டத்தின் அழைப்பாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, இங்கு கருத்துத் தெரிவிக்கையில், வரி செலுத்துவதன் மூலம் கட்டியெழுப்பப்படும் சுபீட்சம் நெறிமுறை சார்ந்த அபிவிருத்தியுடன் கூடிய நாட்டிற்கு இன்றியமையாத விடயமாகும் என்று தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை,

நமது நாட்டில் வரிகள் தொடர்பான மனப்பாங்கு நல்லதாக இல்லை. வரிகள் வீணடிக்கப்படுகின்றன என்றும், வரி ஏய்ப்பு செய்யப்படுகின்றன என்றும், வரி செலுத்துவதில் குழப்பம் இருப்பதாகவும் கருத்தாடல் உள்ளது. மேலும், வரி ஏய்ப்பு குறித்து ஆலோசனை வழங்க நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நம் நாட்டில் நிலவும் வரி வசூலிப்பதற்கான நிர்வாக பொறிமுறை மற்றும் வரிகளுக்கு ஏற்பட்ட அழிவு குறித்த சமூக புரிதல் காரணமாக எழுந்துள்ளன. எனவே, வரி செலுத்துதல் மற்றும் அதற்கான பொறிமுறை மற்றும் அது குறித்த பொது மக்களின் மனப்பான்மை குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

எங்களிடம் உள்ள சில தரவுகளைப் பார்க்கும்போது, அது ஒரு சிறந்த நிலை அல்ல. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 43% மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளன. அதேபோன்று, 2023-2024 ஆண்டுகளில் தனிநபர் வருமான வரிகளில் 23% மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.
கூட்டு வர்த்தக அறிக்கைகளை 46% வழங்கியுள்ளனர். அதேபோன்று PAYE Tax செலுத்துபவர்களில் 18% அறிக்கைகளை வழங்கியுள்ளனர். இந்த தரவுகள் எதுவும் 50% ஐ தாண்டவில்லை. இது வரி செலுத்துவதில் தயக்கத்தையும் வரிகளைத் தவிர்க்கும் முயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது.

இதற்குக் காரணம், கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் நமது நாட்டின் வரிப் பணத்தைப் பயன்படுத்திய விதம் குறித்து, வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த விமர்சனமே ஆகும். எனவே, முதலில் செய்ய வேண்டியது, பொதுமக்களின் வரிப் பணம் அத்தியாவசியத் தேவைகளுக்கு முறையாகச் செலவிடப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குவதாகும். இது என்னிடமும், நமது அரசியல் அதிகாரத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் செலுத்தும் எந்தவொரு வரிப் பணத்திலும் ஒரு ரூபாயைக் கூட ஆட்சியாளர்கள் மோசடி செய்யவோ அல்லது வீணாக்கவோ மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தினாலும், சட்டங்களாலும் வர்த்தமானி அறிவிப்புகளினாலும் எனக்கு சில வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவுகள் அதிகமான வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளன. ஆனால் அந்த வரப்பிரசாதங்களை பெரும் எண்ணிக்கையை நாங்கள் விட்டுக்கொடுத்துள்ளோம்.

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை முடிந்தவரை நான் குறைத்துள்ளேன். எமது அமைச்சரவையும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறுதான். அதனால்தான் நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். முதல் முன்மாதிரியை அங்கிருந்து வழங்குகின்றோம்.

மேலும் செயற்திறன்மிக்க அரச சேவையை நாம் உருவாக்க வேண்டும். அரச பொறிமுறைக்கும் பிரஜைக்கும் இடையிலான உறவை மிக விரைவான மற்றும் திறமையான டிஜிட்டல் முறையை நோக்கி நகர்த்த நாங்கள் கடுமையாக செயற்பட்டு வருகிறோம். அதேபோன்று, அரச பொறிமுறை முழுவதும் பரவியுள்ள ஊழல் தடுக்கப்பட வேண்டும். கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் சென்று உங்கள் புகைப்படம் மற்றும் கைவிரல் அடையாளத்தை தான் நேரடியாகச் சென்று பதிவுசெய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் பாதாள உலக தலைவர்களுக்கு மூன்று வகையான கைவிரல் அடையாளங்கள் மற்றும் பல வகையான புகைப்படங்களுக்கான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நமது சட்ட கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்களே அந்தக் கட்டமைப்பை மீறியுள்ளன.

மேலும், போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவரின் லோக்கரில் இருந்து, அவர் மூன்றாண்டுகளில் கூட சம்பாதிக்க முடியாத பணம் கிடைக்கிறது. சுங்கம் குறித்து பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இதே நிலை மதுவரித் திணைக்களத்திலும் உள்ளது. எனவே, நம் நாட்டில் வெளிப்படையாக அமைதியான சூழ்நிலை இருந்தாலும், ஒரு கறுப்புக் கட்டமைப்பு அதன் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கருப்பு கட்டமைப்பில் சட்டவிரோத வர்த்தகக் குழு ஒன்று உள்ளது.

அண்மையில், சுங்க கொள்கலன்களைத் திறக்கும் போது, நன்கு பிரபல்யமான வர்த்தக நாமத்தையுடைய நிறுவனத்தால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, இந்த கறுப்பு பொறிமுறையில் ஒரு சில சட்டவிரோத வர்த்தகர்கள் உள்ளனர். இந்தக் கறுப்புப் பொறிமுறையில் ஆட்சியாளர்கள் இருந்தனர். இந்தக் கறுப்புப் பொறிமுறையில் அரச அதிகாரிகள், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்துள்ளவர்களும் மற்றும் ஊடகங்களும் அடங்கும். எனவே, எமக்கு முன்னால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கருப்பு பொறிமுறை ஒன்று உள்ளது. இந்த கருப்பு பொறிமுறை இல்லாதொழிக்கப்படும் என்று இந்த நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

அனைவரும் சட்டத்திற்கு உட்படும் சூழல் உருவாக்கப்படும். செல்வத்தை சேகரித்து என்ன பயன் இருக்கின்றது? 61 வயதில் 20 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தால்? பொதுமக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று, பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெற்று, பொதுமக்களின் பணத்தைத் திருட முடியுமா? அவை அனைத்திற்கும் தண்டனைகள் வழங்கப்படும். எனவே, வரி தொடர்பான பிரச்சனை என்பது வரி செலுத்துவதற்கும் வரிப்பணம் பெற்றுக்கொடுப்பதற்கும் இடையே உள்ள பிரச்சினை மாத்திரமல்ல. இது அதையும் தாண்டிய ஒரு வலைப்பின்னல் பிரச்சினை. வெவ்வேறு நிறுவனங்களைக் குறை கூறுவது பயனற்றது. இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னல். ஒரு அரசாங்க பொறிமுறையாக நாம் இதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இதற்குத் தயாராக இல்லாத எவரும் வெளியேறலாம். இந்தப் பொறிமுறையை இல்லாதொழிக்காவிட்டால், இந்த நாடு இங்கிருந்து ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது. எனவே, இந்த கறுப்பு பொறிமுறையை நாங்கள் ஒழிப்போம். வர்த்தகர்கள் நியாயமாக வியாபாரம் செய்து அரசாங்கத்திற்கு நியாயமான அளவு வரி செலுத்துகிறார்கள். அதைப் பாதுகாப்பது அரச பொறிமுறையின் பொறுப்பு. மேலும் கடினத்துடன் உழைத்து சம்பாதித்த செல்வத்தை அரசுக்கு செலுத்துவது போல், அதை பாதுகாப்பதும் நமது பொறுப்பு. எனவே, வரி செலுத்தும் அனைவரையும் வரி செலுத்துமாறு அழைக்கிறேன். ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்பதாக நாங்கள் உறுதியளிக்கிறோம். ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்பட்டால், அதற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

அதன்போது அதிகாரமோ அல்லது சமூகப் பின்னணியோ எந்த வகையிலும் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது. முழுமையாக அந்த கறுப்பு பொறிமுறையையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நாம் விரும்பும் வரி இலக்குகளை அடைய முடியும். எனவே, இது குறித்த செய்தியை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வரி வாரத்தில் எங்களது எதிர்பார்ப்பு. அதற்காக, ஒரு பரந்த சமூக கருத்தாடல் உருவாக்கப்பட வேண்டும்.

சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்க நாம் தவறிவிட்டோம். பல தொழிலதிபர்கள் மற்றும் வர்ததகர்கள் எழுப்பும் முதல் பிரச்சினை வரிகள் பற்றிய பிரச்சினை. அதனால்தான் வரிகள் எப்போதும் பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு ஒரு தடையாகவே விவாதிக்கப்படுகின்றன. வரிகள் பொருளாதார இயக்கத்திற்கு ஒரு தடையல்ல.

அனைத்து கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். உங்கள் தொழிலுக்கு மின்சாரம் இல்லையென்றால், எம்மிடம் கூறுங்கள்,

நாங்கள் மின்சாரம் பெற்றுத்தருவோம். உங்கள் தொழிலை நடத்துவதற்கு பொருத்தமான காணி இல்லையென்றால், நாங்கள் அதை உங்களுக்காக வழங்குவோம். உங்களிடம் தண்ணீர் வசதி இல்லையென்றால், நாங்கள் அதையும் வழங்குவோம். பொருத்தமான வீதிகள் இல்லையென்றால், நாம் அவற்றை நிர்மானிப்போம். ஆனால், வரிகளை செலுத்துங்கள். யாரும் தங்கள் தொழில் அல்லது வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக வரித் திருத்தங்களைக் கேட்க வேண்டாம். ஏனைய அனைத்தும், உட்கட்டமைப்பு வசதிகள், சட்டக் கட்டமைப்பு தயார் செய்து தரப்படும். செயல்திறன் போதுமானதாக இல்லாவிட்டால், அதையும் சரிசெய்து தருவோம். நீங்கள் நியாயமான வரி செலுத்த வேண்டும்.

நாம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை படிப்படியாக மீண்டும் கட்டியெழுப்புகிறோம். நமக்கு ஒரு சவால் உள்ளது. இதை நான் அதிகம் கூற விரும்பவில்லை, ஆனால் நான் அதைக் கூற வேண்டும். நமக்குக் கிடைப்பது ஸ்தம்பித்த ஒரு நாடு. பொதுவாக, ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, அரசியல் மாறுகிறது, ஆனால் பலருக்கு தொடர்ந்து செயற்படும் ஒரு நாடே கிடைக்கிறது. ஆனால் எமக்கு கிடைத்தது ஸ்தம்பித்த நாடு. முதலீடுகள், திட்டங்கள், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துதல் போன்ற அனைத்தும் ஸ்தம்பித்துவிட்ட நாடு. இப்போது நமது பணி என்ன? இந்த எல்லா அம்சங்களிலும் ஸ்தம்பித்திருக்கும் ஒரு நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது? அதுதான் முதல் சவால்.
அதனால்தான் வெளிநாட்டு முதலீடுகள் மூலம், ஸ்தம்பித்து நிற்கும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கிறோம். இந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், கைவிடப்பட்டுள்ள பல திட்டங்களை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

எனவே, நின்றுபோன ஒரு நாட்டை நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டைப் பிடித்து முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும். ஆனால், எமக்கு நாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டியுள்ளது. அந்த மீளுதலின்போது நமது நாடு இவ்வளவு சரிவில் விழ என்ன காரணிகள் வழிவகுத்தன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்? இதுபோன்ற நெருக்கடிகளில் இருந்து, அரசியல் அதிகாரமாகிய நாங்களும்,அரச அதிகாரிகளாகிய நீங்களும், இந்த நாட்டின் பொதுமக்களும் இதுபோன்ற சரிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் மனிதர்களே அல்ல. அந்த வீழ்ச்சிக்கான காரணங்களை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும்போது, அந்த நீதிபதிகள் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த

சரிவுக்கான காரணிகளை எங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே, சரிவுக்கான காரணங்களை மிக நன்றாகக் கண்டறிந்து, அவை மீண்டும் நிகழாமல் தடுப்பதே எங்களுக்கான பணியாகும்.

நமது வரி சீர்திருத்தங்களை முறையாக செயல்படுத்தவும், நியாயமான அளவு வரியை வசூலிக்கவும் நாம் தவறியதுதான் வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணம், இது நாமே உருவாக்கிய நெருக்கடி. எனக்கு நினைவின்படி, 1996 ஆம் ஆண்டில், திறைசேரி வரி வருமானத்தில் தேசிய உற்பத்தியில் 23% பெற்றது. அது 7.3% ஆகக் குறைந்தது, பாரிய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே, வரிகளை முறையாக வசூலிப்பது அவசியம். இது நாமே உருவாக்கிய நெருக்கடி. அதாவது, வரிகளை முறையாக வசூலிக்கத் தவறியதால் எழுந்த நெருக்கடி. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு அரசியல் நலன்களுக்காக வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், பொருளாதாரக் கோட்பாடு அல்ல. அரசியல் கொள்கைகளுக்காக மாத்திரம் வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் எழுந்த நெருக்கடி.

நாம் எந்த ஒரு பொருளாதார முடிவையும் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் எடுப்பதில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் அனைத்து பொருளாதார முடிவுகளையும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கிறோம். அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதார முடிவெடுப்பது நாட்டின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் ஆகும்.

இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள முடியாததால், வெளிப்புற தரப்பினரிற்கு கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலிருந்து நாம் செயற்படுத்தப்படுகின்றோம். நாம் பெற்ற அதே வருமான இலக்குகள் எமக்கு இன்று இலக்குகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, தேசிய உற்பத்தி வருமானத்தை 15.1% ஆக அதிகரிக்க வேண்டும்.

அதில், 2.3% முதன்மைக் கணக்கில் மேலதிகமாக பேணப்பட வேண்டும். செலவு எல்லைகள் மற்றும் வருமான இலக்குகள் தொடர்பான வெளிப்புற தரப்பினரின் இணக்கப்பாடுகளின்படி நாம் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும். ஏன்? நாம் ஒரு மோசமான பிள்ளை. இப்போது நாம் தண்டிக்கப்பட்டு, நன்னடத்தை கண்காணிப்பில் இருக்கிறோம்.

நமது பொருளாதாரம், நமது சொத்துக்கள் அனைத்தும் சோதனைக் காலத்தில் உள்ளன. நாம் எப்போதும் சோதனைக் காலத்தின் பொருளாதாரமாக இருக்க வேண்டுமா? இல்லை. நிதி

அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் நடந்த கலந்துரையாடலில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தில் நுழைந்த கடைசி வாய்ப்பாக இது இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம்.

நாம் நமக்கே உரிய அளவுகோல்களையும் இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டிய ஒரு பொருளாதாரப் பயணத்தைத் தொடங்க வேண்டும். ஆனால் ஒரு கட்டத்தில், நமது பொருளாதாரத்தை பொது மக்களின் தேவைகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுடன் கட்டமைக்க வேண்டும். ஆனால் நாம் ஓரளவிற்கு தகுதிகாண் காலத்தில் இருக்கும் ஒரு பொருளாதாரத்தை நடத்தி வருகிறோம். எனவே,சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தில் நுழைந்த கடைசி வாய்ப்பாக இதனை மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த இலக்கை அடைய, நாம் நமது அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்த அரச வருமானத்தில் பெரும் பகுதி வரிகளிலிருந்து கிடைக்கிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம், ஆகியவை அந்த வரிகளை வசூலிக்க மிகப்பெரிய அளவிலான பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே, வரி செலுத்துவோர், வரி வசூல் பொறிமுறை மற்றும் அந்த வரி பணத்தை நிர்வகிப்பவர்கள் என, இந்த செயற்பாட்டை வெற்றிபெறச் செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். சோதனைக்குட்பட்ட பொருளாதாரத்தை நமக்கே உரிய இறையாண்மை கொண்ட பொருளாதாரமாக மாற்ற பாடுபடுவோம்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட அரச அதிகாரிகள், தூதுவர்கள் மற்றும் தனியார் துறை அதிகாரிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.