சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தாராளமான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (10) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Back To the Faculty of Law – Law Faculty சட்ட பீடத்திற்கு மீண்டும் – சட்ட பீடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் சட்ட பீட பீடாதிபதி அலுவலகத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற, கொழும்பு சட்ட பீடத்தின் முதலாவது பழைய மாணவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, சட்ட பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மதுர விதானகே, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில், கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பட்டப்பின்படிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கும் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இங்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விட தரத்தை உயர்த்தி கொழும்பு பல்கலைக்கழகத்தை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் கொண்டு செல்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அப்போது, வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைக்கு அழைத்து வர முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தற்போது இருப்பது போன்று வசதிகள் இல்லாத போதும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் கல்வித் தரம் உயர் மட்டத்தில் இருந்ததையும் ஜனாதிபதி மற்றும் குழுவினர் நினைவு கூர்ந்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்காக நான்கு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை உபவேந்தர், சட்ட பீடத்தின் பீடாதிபதி மற்றும் சட்ட பீட சங்கத்தின் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.
மாணவர்களுடன் ஜனாதிபதி சில செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா, சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய கல்வியியலாளர்கள் கலந்துகொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.