Published on: பிப்ரவரி 10, 2025

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்தனர்.

அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை என்றும், அவை இன்றி முடிவுகளை எடுக்கும் அபாயத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரில்லை என்றும், துல்லியமான தரவு மற்றும் தகவல் முறைமையை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், அந்தப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சலுகை விலையில் நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. விலைக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு உகந்த சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாட்டு மக்களின் உணவு நுகர்வு தொடர்பில் ஆய்வு செய்து, ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும், உணவு விரயத்தைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை கட்டமைப்பை நிறுவுதல், அத்தியாவசிய உணவுத் தகவல் கட்டமைப்பைப் பராமரித்தல், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்குதல், விஞ்ஞானபூர்வமான சான்றுகளின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து விநியோகிப்பதற்கான திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் ஜி.பி.சபுதந்திரி , ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜனக பண்டார உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.