தேர்தலை இலக்காகக் கொள்ளாமல் எதிர்கால சந்ததியினருக்காகவே திருகோணமலை அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி திருகோணமலையில் தெரிவித்தார்

• திருகோணமலை துறைமுகம் மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
• இலங்கையை துறைமுக மையமாக மாற்றுவதே எமது முயற்சியாகும்.

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் (Surbana Jurong plan) தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில் (Orr’s Hill) இன்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒர்ஸ் ஹில்லில் (Orr’s Hill) இருந்தபடி அவதானித்தார்.

இதற்கிடையே திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் குழுவைச் சந்தித்து அவர்களிடம் விவரங்களை கேட்டறியவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மறக்கவில்லை.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவித்ததாவது-

நாம் இந்த வேலைதிட்டத்தை எதிர்வரும் தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறையினருக்காகவே நடைமுறைப்படுத்துகின்றோம். 2023 ஆம் ஆண்டில் நாம் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 25 ஆண்டுகளே உள்ளன. அதற்கு முன்னர் இதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும்.

எனவே 2048 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டங்களை செய்து முடிக்க வேண்டும். இக்காலப் பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் நாம் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அடுத்த 05 வருடங்களில் இதனை செய்து முடிக்க முடியும் என்று நான் கூறவில்லை. அதனை தொடங்க வேண்டுமென்றே நான் கூறுகின்றேன். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

பொலன்னறுவை தலைநகராக இருந்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகம் பாரிய துறைமுகமாக செயற்பட்டது. அன்று திருகோணமலையைச் சுற்றி வங்காள விரிகுடாவின் வரைபடம் காட்டப்பட்டது. வங்காள விரிகுடா பிராந்தியம் இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது. அது வளர்ச்சி அடைவதற்கு இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும். மியான்மாரில் இன்னும் தொடங்கவே இல்லை, பங்களாதேஷ் தற்போதே தொடங்கியுள்ளது. ஜாவா, சுமத்ராவில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10-15 ஆண்டுகளிலேயே அது, முக்கியமான துறைமுகமாக மாறும். இலங்கையை துறைமுக மையமாக மாற்றுவதே எமது முயற்சியாகும்.

திருகோணமலை துறைமுக கடற்பகுதியை ஆழப்படுத்த வேண்டும். கடற்படை விவகாரங்களில் கிழக்கு மாகாணம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கிழக்கு துறைமுகத்தை ஒரு முன்னணி மூலோபாய துறைமுகமாக மாற்ற வேண்டியது அவசியம் ஆகும். அதாவது எங்களுடைய கடற்படை நடவடிக்கைகளை நாமே மேற்கொள்ளும் வகையில் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த நேரத்தில், எங்கள் கடற்படையிடம் இப்போது இருப்பதை விடவும் அதிகமான கப்பல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா நமக்கு மிகவும் அண்மையில் இருப்பதனால் அது மிகவும் முக்கியமானதாகின்றது.

தற்போது, இந்தியாவுடன் பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். எனவே, இந்த சம்பூர் மின் உற்பத்தி நிலையப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு தடைகள் ஏற்படுமாயின் இதனை நேரடியாக அரசாங்கத்தின் கீழ் எடுத்து பணிகளை தொடர நேரிடும்.

2003ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். எண்ணெய் தாங்கிகளை வழங்குவது தொடர்பாக 2003 ஆம் ஆண்டு முதல், தொழிற்சங்கங்களில் இருந்து பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. நாம் அன்று எண்ணெய் தாங்கிகளைக் கொடுத்திருந்தால், இன்று எண்ணெய் இருந்திருக்கும், வரிசையில் நிற்க வேண்டி இருக்காது. கலவரம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. எண்ணெய் இல்லாததன் காரணமாகவே இந்த பிரச்சினைகள் எழுந்தன.

எண்ணெய் ஏன் இல்லாமல் போனது? நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் எண்ணெய் தாங்கிகளில் எண்ணெய் இருந்திருக்கலாம். ஆனால் எண்ணெய்த் தாங்கிகள் காலியாகியுள்ளன.

அதன் காரணமாக நம் வாகனங்களின் எண்ணெய் தாங்கிகளும் காலியாகின. எமது வயிறுகளும் காலியாகியுள்ளன. இதை நாம் அன்று செய்திருந்தால் இன்று நமக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

இதுபோன்ற தடைகளை மீண்டும் அனுமதிக்க முடியாது. இப்பகுதியில் வாழும் மக்களுக்காக நாம் இதை செய்ய வேண்டும். நான் இந்த திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன், பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதன் பின்னர் அது சட்டமாக்கப்படும். ஏனெனில் அரசாங்கங்கள் மாறலாம், பாராளுமன்றம் மாறலாம். ஆனால் கொள்கைகள் மாறக்கூடாது. எனவே, எவ்வித தடையுமின்றி நாம் முன்னேறிச் செல்லுவதற்கே பணியாற்ற வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பில் நாம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்.

அது திருகோணமலையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திருகோணமலைக்கும் இந்தியாவிற்கும் இடையே மின் இணைப்புகள் இருக்க வேண்டும், இந்தியாவுடன் இருக்கும் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலையை ஆற்றல் மையமாக மாற்ற வேண்டும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அதன் மத்திய துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் இருக்க வேண்டும். சிலவேளைகளில் எதிர்காலத்தில் நாம் சிங்கப்பூருக்கும் ஒரு வழியை உருவாக்க முடியும். அந்த நிலைக்கு முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. இந்த மாகாணத்தின் பொருளாதாரத்தை ஈட்டும் ஆற்றல் மிகவும் விசாலமானது. அதனை இலக்காகக் கொண்டே நாம் இத்திட்டத்தை முன்னேற்ற வேண்டும்.

பொருளாதார ரீதியாக இந்த துறைமுக நகரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டுமென மட்டுப்படுத்த முடியாது. இது அநுராதபுரம், வவுனியா, தம்புள்ளை நகரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். நாட்டில் வன்னி, கிழக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களிலேயே அதிகளவான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் அதனை இங்கிருந்துதான் செய்ய வேண்டும்.

நாங்கள் கோதுமை பயிரிடுவதில்லை, ஆனால் ஏற்றுமதி செய்கிறோம். அதனை பிரிமா நிறுவனமே முன்னெடுத்து வருகின்றது. கோதுமை மா எமது முக்கிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாகும்.

அதனை நாம் வெளியிலிருந்து பெற்று ஏற்றுமதி செய்கிறோம். அதேபோன்று பிற பொருட்களையும் இதே வழியில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே இது தொடர்பில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த மாகாணத்தில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கு நாம் இந்தியாவுடன் இணக்கம் கண்டுள்ளோம். அதற்காக கைத்தொழில் வலயம் ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுகளை இலங்கையும் இந்தியாவும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். அதனுடன் துறைமுகத்துக்கும் தொடர்பு உண்டு. அதற்காக ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்க திட்டமிடுவோம்.

அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு முன், நாம் எமது பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்து எம்மிடம் சுற்றுலாத் துறை உள்ளது.

குறிப்பாக அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை என்ற முக்கோண கலாசாரம் உள்ளது. அதனால் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திருகோணமலையில் விமான நிலையம் இருந்தாலும் அங்கே பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது. எனவே ஹிங்குரக்கொடை அல்லது வவுனியாவை சர்வதேச விமான நிலைய தலமாக உருவாக்குவதற்கான நிலைமை ஏற்படும். திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் உள்ளது.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் திருகோணமலை அமைந்துள்ளது. அதேபோன்று வடமத்திய மாகாணத்தை எடுத்துக் கொண்டால் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவையின் பெரும் பகுதி இப்பிரதேசத்துக்கே சொந்தமாகின்றது.

இந்த கூட்டு வேலைத்திட்டத்தை 05 வருடங்களில் செய்ய முடியாது. இதனை 20-25 வருடங்களில் செய்யலாம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்ற 10 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே இதன் பணிகள் குறித்து கலந்தாலோசித்தப் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்துடன் இச்செயல் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரசபை, முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தை உருவாக்குவதில் ஆலோசனைப் பங்களிப்பை வழங்கிய Surbana Jurong நிறுவனத்தின் பிரதான திட்டமிடல் நிறைவேற்று அதிகாரி Ketan Kulkarni, கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்போரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.