Published on: செப்டம்பர் 6, 2022

நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம்! ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பகிரங்க அழைப்பு

– உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்கவும் திட்டம்!
– பயங்கரவாத்த் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது.அதே வேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது. 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும்.கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம். இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி,பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஈ.பி.டி.பி தலைவரும், மீன்பிடி நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், தேசிய முஸ்லிம் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், தேசிய காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் காணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுகததாச விளையாட்டரங்கிற்கு வருகை தந்திருந்த அனைத்து இன மக்களாலும் அரங்கம் நிறைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வருகையுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பிக்கப்பட்டதுடன், கட்சியின் ஆரம்பகர்த்தா, தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் ஏனைய தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மலர் மாலை அணிவித்தார். டட்லி சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு ருவன் விஜயவர்தனவும், சேர் ஜோன் கொத்தலாவலவின் உருவச்சிலைக்கு கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசமும், ஜே.ஆர்.ஜயவர்தனவின் உருவச் சிலைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டாரவும், ஆர்.பிரேமதாச அவர்களின் உருவச்சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், டி.பி. விஜேதுங்கவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்கவும் மலர் மாலை அணிவித்தனர்.

தேசிய ஒருமைப்பாட்டின் பெறுமையை வெளிப்படுத்தும் வகையில், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கட்சியின் பெருமையை வெளிப்படுத்தும் காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.ஆண்டு விழாவையொட்டி உள்நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வாத்திய இசை நிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, தயா கமகே, டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.