திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்ற , சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைகளில் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் சிறைக் கைதிகளை தொழில்முயற்சியில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்கு 04 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன,
சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் என தற்போது 28,468 சிறைக்கைதிகள் இருப்பதாகவும், சிறைக்கைதிகளில் 50.3% சதவீதமானவர்கள் போதைப்பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் இருப்பதே சிறைச்சாலைகளில் தற்போது பாரிய சிக்கலாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், சில சிறைச்சாலைகளில் அதன் சதவீதம் 65% ஆக இருப்பதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் தண்டனை பெறும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டைனைகளை வழங்குவது மாத்திரம் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இவர்களுக்கு திறன்விருத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் புனர்வாழ்வளிப்பது அவசியமாகும் என்றும் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதும் மீண்டும் அதே தவறைச் செய்வதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை சிறையில் அடைத்து வருவதாக சிலர் கூறினாலும் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் சுமார் 40 பேரே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறைக்கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று ஒரு சிலர் குற்றஞ்சாட்டினாலும் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க மாத்திரம் அரசாங்கம் 3.9 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், 2021-2022 காலப் பகுதியிலும் கூட இதற்கான நிதியை ஒதுக்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறைச்சாலைகளில் 13,000 சிறைக்கைதிகளுக்கே இடவசதி இருக்கின்ற போதிலும், தற்போது சுமார் 29,000 கைதிகள் இருப்பது பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும், அதற்காக திறைசேரியில் இருந்து பாரியளவு நிதி சிறைச்சாலைகளுக்கு வழங்கப்படுவதனால் பொதுமக்களுக்கு அவசியமான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் சிறைச்சாலைகளின் செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, பாரிய குற்றவியல் குற்றங்கள் இன்றி, சிவில் குற்றங்களுக்கு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட முன்னர் அவர்கள் தொடர்பான விசாரணை நிறைவைடையும் வரை குற்றம் சாட்டப்படுபவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினரை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும், சிறைக்கைதிகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தவும் ஏனையவர்களை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளையும் நாட்டுக்கு பயன்மிக்கவர்களாக மாற்றும் வகையில் மேலும் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் சிறைச்சாலைக்குள்ளே உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய தொழிற்சாலைகளை நிறுவுவது குறித்து கலந்தாலோசித்து வருவதுடன் தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தப் பணியை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது, இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் இத்திட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு அவற்றை தற்போது பரிசீலித்து வருவதாகவும் சிறைச்சாலைகளின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பின் மாத்திரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு சிறைக்கைதிகள் தொழில்முயற்சிகளில் ஈடுபட்டு பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை, அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய ஓவியக் கண்காட்சியொன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசெல்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளுக்கு மேலதிகமாக மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் கூடுதல் பரிசோதனைக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
பிரதான நகரங்களில், வர்த்தகப் பெறுமதிக்க இடங்களில் அமைந்துள்ள சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெறுபவர்களை தனியாக வைத்து மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் புனர்வாழ்வளிப்பதற்குமான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.