ஒரு தீவாக இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் சர்வதேச உலகில் இலங்கையை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று (17) முற்பகல் தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் 97 ஆவது பயிற்சியை முடித்து வெளியேறும் கெடட் உத்தியோகத்தர்களின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த முந்நூற்று ஐம்பத்தொரு (351) கெடட் உத்தியோகத்தர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த நான்கு கெடட் உத்தியோகத்தர்களும் இங்கு பயிற்சி பெற்று அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இராணுவ கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்த முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகவும் கௌரவத்துடன் வரவேற்கப்பட்டார்.

முதலில் அவ்வளாகத்தில் உள்ள இராணுவ வீரர் நினைவிடத்திற்குச் சென்ற ஜனாதிபதி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கெடட் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறந்த கெடட் அணிக்கு சாம்பியன் கொடியை வழங்கியதுடன், கெடட் வீரர்களிடம் வாள்களையும் கையளித்தார்.

அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுடன் குழு புகைப்படத்தில் தோன்றிய ஜனாதிபதி, தனது விஜயத்தைக் குறிக்கும் வகையில் கல்லூரி மைதானத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

இன்றைய நாள் உங்களுக்கு மிக முக்கியமானது. இன்று நீங்கள் தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை முடித்துள்ளீர்கள். ஆனால் இது உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாகும். இன்று முதல் நீங்கள் அனைவரும் இராணுவத்தின் நிரந்தர உறுப்பினர்களாக பணியாற்றத் தொடங்குவீர்கள்.

இலங்கை இராணுவத்தின் தலைவர்கள் என்ற வகையில் உங்களுக்கும் இன்று முதல் பொறுப்பு உள்ளது. அதன்படி, இராணுவத்தையும் அதன் வீரர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களின் அரசாங்கம் என்ற வகையில் உங்களுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.

எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மரியாதையையும் அதன் நற்பெயரையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாடு என்ற அடிப்படையில் நாம் உலக வல்லரசுகளிடமிருந்து ஒரு தரப்பாக பிரிந்து நிற்கவில்லை. உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஒரு தீவு நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. உள்ளக மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன் உங்களிடம் உள்ளது. உங்களை உள்ளடக்கிய எங்கள் இராணுவத்துக்கு இராணுவ அனுபவம் உள்ளது. மேலும் அவர்களுக்கு சர்வதேச போர் அனுபவம் உள்ளது. ஐ.நா படைகளுடன் இணைந்து மாலி அரசின் நடவடிக்கைகளில் நமது பாதுகாப்புப் படைகளும் பங்கு கொள்கின்றன.

அதனால் சவால்களை சமாளிக்க முடியும். எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு உள்ளது. எனவே, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து, நீங்கள் அனைவரும் வலுவாக முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைத் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் விக்கும் லியனகே, தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் நியங்கொட உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.